நாகப்பட்டினம்: நாகையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார் தொடர்பாக பேராசிரியரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.
நாகை மாவட்டம் புத்தூரில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்படுகிறது. இங்கு, வெளிப்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்(35) என்பவர் உடற்குறியியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர், கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வரும் 22 வயது மாணவியிடம் பாலியல் ரீதியாக தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படுகிறது. இது குறித்த உரையாடல், சமூக வலைதளங்களில் வெளியானது.
இதுகுறித்து, நேற்று தகவல் அறிந்த நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுன்னிசாவை விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் 2 அலுவலர்கள் நேற்று புத்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரிக்குச் சென்று கல்லூரி பேராசிரியர் சதீஷ் மற்றும் பிற பேராசிரியர்கள், கல்லூரி செயலர், கல்லூரி தாளாளர், மாணவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி எழுதி வாங்கினர்.