சர்ச்சையை ஏற்படுத்திய அம்பேத்கர் போஸ்டர் 
க்ரைம்

கும்பகோணம் | சர்ச்சைக்குரிய அம்பேத்கர் சுவரொட்டியை அச்சடித்தவர் கைது

செய்திப்பிரிவு

கும்பகோணம்: கும்பகோணத்தில் சர்ச்சைக்குரிய வகையில் அம்பேத்கர் படம் அச்சிட்ட அச்சக உரிமையாளரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

அம்பேத்கர் நினைவுநாளை யொட்டி, கும்பகோணம் மாநகரில் சர்ச்சைக்குரிய வகையில் அம்பேத்கர் படம் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் 5-ம் தேதி இரவு ஒட்டப்பட்டன. அந்த சுவரொட்டியில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், மாநிலச் செயலாளர் குருமூர்த்தி படங்களும் இடம்பெற்றிருந்தன. இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, போலீஸார் அந்த சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து கும்பகோணம் டிஎஸ்பி அலுவலகம் முன்பு தலித் அமைப்பினர், அவரை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் டி.குருமூர்த்தியை போலீஸார் நேற்று கைது செய்து, கும்பகோணம் கிளைச்சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து சுவரொட்டியை அச்சடித்த, கும்பகோணம், உப்புக்காரத்தெருவில், அச்சகம் நடத்தி வரும், உரிமையாளரான அண்ணலக்கிரஹாரத்தை சேர்ந்த சுபாஷ் மகன் மணிகண்டன் (35) என்பவரை, கிழக்கு போலீஸார் கைது செய்து, அவர் பயன்படுத்திய கணினி மற்றும் மின்னனு பொருட்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும் ஐபிசி 153(ஏ), 295(ஏ), 504,505 ஆகிய 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.

SCROLL FOR NEXT