புதுடெல்லி: டெல்லியில் நடந்த ஷிரத்தா வாக்கர் கொலை வழக்கில், வலுவான ஆதாரம் கிடைக்காததால், அவரது காதலர் அப்தாப்பிடம் உண்மை கண்டறியும் (நார்கோ) சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர் மருத்துவமனையில் அப்தாப்புக்கு நேற்று காலை 10 மணிக்கு நார்கோ பரிசோதனை தொடங்கியது.
சோடியம் பெந்தோதால், ஸ்கோபோலேமின் மற்றும் சோடியம் அமிதல் போன்ற மருந்துகள் செலுத்தப்பட்டு அப்தாப் மயக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன்பின் விசாரணை அதிகாரிகள் கேள்வி எழுப்பி, அப்தாப் அளித்த பதில்களை பதிவு செய்தனர்.
இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததாகவும், அப்தாப் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.