சென்னை: 2016-ல் கும்பகோணத்தைச் சேர்ந்த தம்பதி, தங்களது குழந்தைகளுடன் சென்னை போரூரில் நடைபெற்ற பொருட்காட்சியில் பணிபுரிந்து வந்தனர். இவர்களுடன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் பாரதி என்பவரும் உடன் பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2016 பிப்.3-ம் தேதி இரவு இவர்களது 6 மாத குழந்தையை பாரதி தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாரதியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக நடந்தது.
அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜராகி குற்றச்சாட்டை நிரூபித்து வாதிட்டார். அதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட பாரதிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.