மதுரை: போலி பாஸ்போர்ட் வழக்கில் காவல் ஆய்வாளர் உட்பட 9 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. 2009-ல் மதுரையில் பலருக்கு போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 22 பேருக்கு போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டது உறுதியானது.
இதையடுத்து, மதுரை மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்த உதவி பாஸ்போர்ட் அதிகாரி கீதாபாய், உதவியாளர் அன்பழகன், திண்டுக்கல் பேகம்பூர் தபால்காரர் செல்வதுரை, திண்டுக்கல் தெற்கு டவுன் காவல் ஆய்வாளர் தங்கவேலு, திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகப் பணியாளர் சுரேஷ்பாபு, முகவர்கள் இப்ராஹிம் மீரான், பக்ருதீன், ஷாஜகான், சுனிதா பானு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட முகவர்கள் பக்ருதீன், ஷாஜகான் மற்றும் செல்வதுரை, சுரேஷ்பாபு ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.80 ஆயிரம் அபராதமும், உதவி பாஸ்போர்ட் அதிகாரி கீதாபாய், இப்ராகிம் மீரான், சுனிதா பானு ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.70 ஆயிரம் அபராதமும், அன்பழகன், காவல் ஆய்வாளர் தங்கவேலு ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சண்முகவேல் நேற்று தீர்ப்பளித்தார்.