பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள வால்பாறை மலைப் பாதையில், 13-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள தடுப்புச் சுவரில், இன்று மாலை சுற்றுலா வேன் மோதி 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த 9 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிந்தல்மன்னா நகரைச் சேர்ந்தவர்கள், கோடை விடுமுறையையொட்டி, கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள வால்பாறைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அதேப் பகுதியைச் சேர்ந்த டெம்போ டிராவலர் சுற்றுலா வேன் மூலம் இவர்கள் கேரளாவில் இருந்து வால்பாறைக்கு புறப்பட்டனர்.
வேனை முகமது பாசித் (21) என்பவர் ஓட்டினார். இந்த வேனில் ஓட்டுநர் உட்பட 13 பேர் இருந்தனர். இவர்கள் இரு நாட்களுக்கு முன்னர் வால்பாறைக்கு வந்தனர். வால்பாறையின் பல்வேறு இடங்களில் சுற்றிப் பார்த்தனர். அதைத் தொடர்ந்து கோவை வழியாக மீண்டும் கேரளாவுக்கு செல்ல முடிவு செய்தனர். தொடர்ந்து இன்று மதியம் வால்பாறையில் இருந்து வேன் மூலம் கோவை நோக்கி 13 பேரும் புறப்பட்டனர்.
அப்போது வால்பாறை மலைப்பாதையில் உள்ள, 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே வேன் வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் தாறுமாறாக சென்ற வேன், அங்குள்ள தடுப்புச் சுவரில் மோதி, 800 அடி கீழே உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
வேனில் இருந்த சுற்றுலா பயணிகள் அலறித் துடித்தனர். அவர்களது அலறல் சத்தத்தை கேட்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், விபத்து ஏற்பட்டதை அறிந்து வேனில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீஸாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ஒரு ஆண், ஒரு சிறுவன் மற்றும் 7 பெண்கள் என 9 பயணிகள் சடலமாக மீட்கப்பட்டனர். 17 மற்றும் 18 வயதுடைய இரண்டு பேர், ஓட்டுநர் முகமது பாசித் உள்ளிட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் சுற்றுலா வேன் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. காடம்பாறை போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.