க்ரைம்

நாட்டுக்கோழி வளர்ப்பில் ரூ.1.98 கோடி மோசடி: இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

கோவை: நாட்டுக்கோழி வளர்ப்பில் ரூ.1.98 கோடி மோசடி செய்த இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) நேற்று தீர்ப்பளித்தது.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் ஜி.எஸ். பவுல்ட்ரி பார்ம்ஸ் என்ற நிறுவனத்தை சுரேஷ்குமார், ஜெகநாதன் ஆகியோர் நடத்தி வந்தனர். ‘இந்த நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால், ஷெட் அமைத்து, 400 முதல் 450 நாட்டுகோழிக்குஞ்சுகள் அளித்து, அதற்கான தீவனத்தை அளிப்போம். அதோடு, மாதம் ரூ.9 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகள் அளிப்போம். ஆண்டுக்கு ஒருமுறை ஊக்கத்தொகையாக ரூ.9 ஆயிரம் வழங்கப்படும். திட்ட முடிவில் முதலீடு செய்த பணத்தை திருப்பி அளித்துவிடுவோம்’ என விளம்பரப்படுத்தினர். இதேபோன்று விஐபி திட்டம் என்ற மற்றொரு திட்டத்தையும் அறிவித்தனர்.

இதனை நம்பி மொத்தம் 89 பேர் ரூ.1.98 கோடி முதலீடு செய்தனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி தொகையை அளிக்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த 2012-ம் ஆண்டு புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஏ.எஸ்.ரவி நேற்று தீர்ப்பளித்தார்.

அதில், சுரேஷ்குமார், ஜெகநாதன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, மொத்தம் ரூ.1.76 கோடி அபராதம் விதித்ததோடு, இந்த தொகையை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் என உத்தரவிடப் பட்டது. மேலும், தீர்ப்பு வழங்கும்போது சுரேஷ்குமார், ஜெகநாதன் ஆகியோர் ஆஜராகாததால் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில், சிறப்பு அரசு வழக்கறிஞர் சி.கண்ணன் ஆஜரானார்.

SCROLL FOR NEXT