படவிளக்கம்: சிபிசிஐடி.விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் (மாஸ்க் அணிந்திருப்பவர்) 
க்ரைம்

182 ஏக்கர் அரசு நில மோசடி வழக்கில் வட்டாட்சியர் கைது: சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை

என்.கணேஷ்ராஜ்

தேனி: பெரியகுளம் அருகே 182 ஏக்கர் அரசு நிலம் பட்டாவாக மாற்றப்பட்ட மோசடி வழக்கில் வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரை சிபிசிஐடி போலீஸார் இன்று கைது செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் 182 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இதற்கான 'அ' பதிவேட்டில் திருத்தம் செய்து வடபுதுப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ் உள்ளிட்ட சில தனிநபர்களுக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டது. இதுகுறித்து 2021-ம் ஆண்டு பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஷப் அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டாட்சியர்கள் ஆனந்தி, ஜெயப்பிரிதா, வட்டாட்சியர்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், மண்டல துணை வட்டாட்சியர்கள் மோகன்ராம், சஞ்சீவ்காந்தி, நில அளவையர்கள் பிச்சைமணி, சக்திவேல், வடவீரநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், வடபுதுப்பட்டியைச் சேர்ந்த அன்னப்பிரகாஷ் உள்ளிட்ட 14 பேர் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு தேனி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் நில அளவையர் பிச்சைமணி, நில அளவை பிரிவு தற்காலிக பணியாளர் அழகர் மற்றும் வடபுதுப்பட்டியைச் சேர்ந்த அன்னப்பிரகாஷ் ஆகிய 3 பேரை 2022-ம் ஆண்டு பிப்.3-ம் தேதியும், மண்டல துணை வட்டாட்சியர் மோகன்ராம், நில அளவையர் சக்திவேல், வருவாய்துறை உதவியாளர் செல்வராஜ் ஆகிய 3 பேரை கடந்த மே 5-ம் தேதியும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரை தேனி சிபிசிஐடி போலீஸார் இன்று கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை தேனி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி கோபிநாதன், கிருஷ்ணகுமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகுமார் கண்டமனூர் சாலையில் உள்ள தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT