க்ரைம்

சென்னை | மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஐஐடியின் 2-ம் ஆண்டு பொறியியல் மாணவி (19) ஒருவர் கடந்த 12-ம் தேதி இரவு 11.15 மணி அளவில் ஐஐடி வளாகத்தின் விடுதி அவென்யூ சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் உதவுவதுபோல நெருங்கி வந்து அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர், அவரது கையை பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மாணவி கூச்சலிடவே, வாகனத்தை போட்டுவிட்டு அந்த இளைஞர் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஐஐடி வளாக பாதுகாப்பு அதிகாரி அன்பழகன் புகார் கொடுத்தார். அதன்பேரில், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தனிப்படை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதன்படி, மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது வேளச்சேரியை சேர்ந்த பெயின்டர் வசந்த் எட்வர்டு (34) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்து, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT