வாகன சோதனையில் பள்ளிகொண்டா காவல் துறையினர் பறிமுதல் செய்த ரூ.50 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள். 
க்ரைம்

வேலூர் | கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

வேலூர்: வெளி மாநிலத்தில் இருந்து வேலூர் வழியாக கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து போதை பொருட்களை கடத்தி வந்த 2 பேரை கைது செய்தனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் கஞ்சா விற்பனையை முழுமையாக ஒழிக்க வேலூர் மாவட்ட காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப்பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரு கின்றனர். மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்தும், டோல்கேட் பகுதிகளில் காவல் துறையினர் தீவிர வாகன சோத னையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வேலூர் மாவட்டம் வழியாக போதை பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில், பள்ளிகொண்டா காவல் துறையினர் கொல்லமங்கலம் பகுதியில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரவு, பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கொல்லமங்கலம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி ஒன்று நின்றிருந்தது.

அந்த லாரியில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள 5 டன் எடையுள்ள ரூ.50 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ், பான்பராக், மாவா உள்ளிட்ட போதைபொருட்கள் மூட்டை, மூட்டையாக இருப்பது தெரியவந்தது. விசாரணையில், கர்நாடகா மாநிலத்தில் இருந்து வேலூர் வழியாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களுக்கு போதை பொருட்கள் கடத்த முயன்றது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, கன்டெய்னர் லாரியில் போதை பொருட்களை கடத்தி வந்த ஓசூர் பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் (36), அரவிந்த் (26) ஆகிய 2 பேரை காவல் துறையினர் கைது செய்து, கன்டெய்னர் லாரியுடன் ரூ.50 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை பள்ளிகொண்டா காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வாகன சோதனையின்போது சிறப்பாக செயல்பட்டு பறிமுதல் செய்த பள்ளி கொண்டா காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் பாராட்டு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT