சென்னை: கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அந்த கட்டிடத்தின் உரிமையாளர் மீது 3 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை சவுகார்பேட்டை தங்கசாலை தெருவில் ஏகாம்பரநாதர் கோயில்அருகே உள்ள பழமையான கட்டிடம், கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக நேற்று முன்தினம் இடிந்துவிழுந்தது. அந்த வழியாகச் சென்றவர்கள், கட்டிடத்தின் கீழ் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கியவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கங்குதேவி (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சங்கர் (34), மாதவரம் சரவணன் (34), வியாசர்பாடி சிவக்குமார் (32) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் சங்கர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து யானைகவுனி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழமையான கட்டிடத்தை முறையாக பராமரிக்காமல், பொது பாதையில் நடந்து செல்பவர்களுக்கு தீங்கு விளைவித்ததாக கட்டிடத்தின் உரிமையாளர் தக்கூர் தாஸ் (65) என்பவர் மீது 3 பிரிவுகளின்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள தக்கூர் தாஸை தேடி வருகின்றனர்.