க்ரைம்

தருமபுரி | இளம் வயது திருமணத்தால் கருவுற்ற சிறுமி உயிரிழப்பு: கணவர் மீது வழக்குப்பதிவு

செய்திப்பிரிவு

தருமபுரி: பாலக்கோடு வட்டத்தில் இளம்வயது திருமணத்தால் கருவுற்ற சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் முத்து (22). 16 வயது சிறுமியை காதலித்த முத்து, பெற்றோர் அனுமதியின்றி கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துள்ளார். பின்னர் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கருவுற்ற சிறுமிக்கு கடந்த வாரத்தில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, அவரை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அப்போது தான் சிறுமிக்கு திருமணம் நடந்த விவகாரம் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், சிறுமியை மணம் முடித்த இளைஞர் மீது மகேந்திரமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த முத்து தலைமறைவானார். இந்நிலையில், தொடர் சிகிச்சையில் இருந்து வந்த சிறுமி தற்போது உயிரிழந்தார். எனவே, சிறுமியின் கணவர் முத்து, அவரது தந்தை உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்த மகேந்திரமங்கலம் போலீஸார் அவர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT