மதுரை: கரூரில் அனுமதி இன்றி செயல்பட்ட கல் குவாரிக்கு எதிராகப் போராடிய விவசாயி ஜெகந்நாதன் கொல்லப்பட்ட வழக்கில் குவாரி உரிமையாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் அனுமதி இல்லாத கல்குவாரிக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகந்நாதன், வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரத்தில் கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், ஓட்டுநர் சக்திவேல், கூலிப்படை கும்பலைச் சேர்ந்த ரஞ்சித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
குவாரி உரிமையாளர் செல்வகுமார் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி தமிழ்செல்வி இன்று விசாரித்தார்.
அப்போது, இறந்த ஜெகநாதன் தாயார் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து செல்வகுமார் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.