க்ரைம்

விளாத்திகுளம் | வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்த பள்ளி சிறுவன் மின்சாரம் தாக்கி மரணம்

செய்திப்பிரிவு

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் வெல்டிங் பட்டறையில் பகுதிநேர வேலை செய்த பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிந்தார்.

விளாத்திகுளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் பால்ராஜ் (24). இவர் ,விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சாலையில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார்.

இவருடைய வெல்டிங் பட்டறையில் தினமும் ரூ.150 சம்பளத்துக்கு பகுதி நேர பணியாளராக அதே பகுதியைச் சேர்ந்த கர்ணமகாராஜன் மகன் 9-ம் வகுப்பு பயிலும் குருமூர்த்தி (15) வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல சிறுவன் குருமூர்த்தி தனது வேலையை முடித்துவிட்டு பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக மின்சார சுவிட்ச் பெட்டியை மிதித்ததில், எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது.

அருகில் இருந்த கடையின் உரிமையாளர் பால்ராஜ் விரைந்து வந்து குருமூர்த்தியை காப்பாற்ற மின் வயரை இழுத்த போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குருமூர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு தலைமையிலான போலீஸார், பால்ராஜிடம் விசாரணை நடத்தினர்.

சிறுவன் குருமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT