பைரோஸ் மாலிக், இம்ரான் அலிகான், முகேஷ். 
க்ரைம்

அண்ணாசாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த மேலும் 3 இளைஞர்கள் கைது

செய்திப்பிரிவு

சென்னை: அண்ணாசாலையில் பைக் ரேஸ் மற்றும் பைக் வீலிங்கில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த மேலும் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தேனாம்பேட்டை அண்ணா சாலை, அண்ணா மேம்பாலத்தில் கடந்த 8-ம் தேதி இரவு ஒரு கும்பல் பைக் பந்தயத்தில் ஈடுபட்டது. இதில் ஓர் இளைஞர், வேகமாக செல்லும் தனது பைக்கின் முன் பகுதியை தூக்கி வீலிங் செய்யும் காட்சியை அவரது நண்பர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்தக் காட்சி வேகமாக பரவியது.

இதைப் பார்த்த சென்னை காவல் துறை உயர் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இது தொடர்பாக பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை செய்தனர்.

விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் முகமது ஹாரீஸ், முகமது சாய்பான் ஆகியஇருவரும் தங்களது நண்பர்களோடு பைக் பந்தயத்தில் ஈடுபட்டதுதெரியவந்தது. இதையடுத்து போலீஸார் இருவரையும் கடந்த 9-ம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார், மேலும் சிலரை தேடிவந்தனர். இந்நிலையில், ராயப்பேட்டையைச் சேர்ந்த பைரோஸ் மாலிக் (19), செம்பியத்தைச் சேர்ந்தஇம்ரான் அலிகான் (20), பெரம்பூரைச் சேர்ந்த முகேஷ் (20) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஒரு இளைஞரை கைது செய்ய தனிப்படை போலீஸார் வடமாநிலம் விரைந்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

SCROLL FOR NEXT