க்ரைம்

கோவை | பவளப்பாறையை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது

செய்திப்பிரிவு

கோவை பேரூரை அடுத்த தீத்திப்பாளையம் பகுதியில் பவளப்பாறைகளை விற்பனைக்கு வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு, போலீஸார் மூலம் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மதுக்கரை வனச்சரக அலுவலர் ப.சந்தியா தலைமையிலான குழுவினர் தீத்திப்பாளையத்தில் தனியார் பொழுதுபோக்கு பூங்கா அருகே செயல்பட்டு வந்த பழமையான பொருட்கள் விற்பனை செய்யும்கடையில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கோவை வேடப்பட்டியைச் சேர்ந்த சாம்சன் செல்வகுமார் (43) என்பவர் பழமையானநாணயங்கள், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்ட பழங்காலப் பொருட்களுடன் சிவப்பு நிற பவளப்பாறைகளை விற்பனைக்காக கடையில் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, வனத்துறையினர் கைது செய்தனர். அங்கிருந்த 3 பவளப்பாறைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “1972-ம் ஆண்டு வன உயிரினப் பாதுகாப்பு சட்டத்தின்படி சிவப்பு நிற பவளப்பாறைகளை வாங்க, விற்க, இருப்பில் வைத்திருக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சாம்சன் செல்வகுமார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்’’ என்றனர்.

SCROLL FOR NEXT