மதுரை அழகப்பன் நகரைச் சேர்ந்தவர் ராஜரத்தினம். பாஜக அரசு தொடர்புப் பிரிவு செயலர். இவர், 2008-ல் செல்லூர் பகுதியிலுள்ள களத்துப் பொட்டலில் மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமியிடம் 5 சென்ட் வீட்டு மனை வாங்கினார்.
பின்னர் அவ்விடத்தை மனைவி வினோதாவுக்கு தானமாகப் பத்திரப் பதிவு செய்து கொடுத்தார். ஏற்கெனவே இவ்விடத்தை உரிமை கொண்டாடுவதில் மகாலட்சுமிக்கும், களத்துப் பொட்டல் பகுதியைச் சேர்ந்த வள்ளிக்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கும் நடந்துள்ளது.
இந்நிலையில், நீதிமன்றத் தீர்ப்பு மகாலட்சுமிக்கு சாதகமாக வந்தது. இதை மறைத்து 2018-ல் 5 சென்டில் 3 சென்ட் இடத்தை ஞானஒளிவுபுரம் பிரபாகரனுக்கு வள்ளி கிரயம் செய்து கொடுத்துள்ளார். இதற்கு திரைப்பட துணை நடிகரான முத்துப்பாண்டி (எ) சிந்தாமுத்து, குருசாமி ஆகியோர் சாட்சி கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த இடமோசடி தொடர்பாக வினோதா காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வள்ளி, பிரபாகரன், முத்துப் பாண்டி, குருசாமி மீது நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன் வழக்குப் பதிவு செய்தார். இவர்களில் முத்துப்பாண்டி(55) நேற்று கைது செய்யப்பட்டார்.