விருத்தாசலம் அருகே கடந்த மே மாதம் காதலனால் தாக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கார்மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் குறிஞ்சிப்பாடி அருகே பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் மகள் ரம்யாகிருஷ்ணன் (23) என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மே 25-ம் தேதி ஸ்ரீதர், ரம்யாகிருஷ்ணனை கார்மாங்குடி வெள்ளாற்று அருகே தனியாக தனது பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஸ்ரீதர் தான் மறைத்து கொண்டு வந்திருந்த சுத்தியால், ரம்யாவின் தலையில் சரமாரியாக வெட்டினார். இதில், அவர் பலத்த காயமடைந்தார். இளம்பெண்ணின் அலறல் குரல் கேட்டு, விவசாய நிலப் பகுதியில் பணிபுரிந்தவர்கள் ஓடிவந்த போது, ஸ்ரீதர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
உடனே அங்கிருந்தவர்கள் ரம்யாவை மீட்டு, விருத்தாசலம் மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கடந்த இரு மாதங்களாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ரம்யா, சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.