திருச்சி மாவட்டம் டால்மியாபுரம் மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி செல்வி(38). 3 மாதங்களுக்கு முன்பு ராஜேந்திரன் இறந்துவிட்ட நிலையில், ஜூலை 8-ம் தேதி முதல் செல்வியைக் காணவில்லை. அவரை குடும்பத்தினரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்தச் சூழலில் ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை பகுதியில் புற்செடிகள் நிறைந்த பள்ளமான இடத்தில், ஒரு பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ரங்கம் போலீஸார் அங்குசென்றுசடலத்தை மீட்டு, விசாரணை நடத்தினர். அந்த சடலத்தின் கழுத்தில் சங்கிலி, காதில் தோடு இருந்தன. மேலும், உடலின் அருகில் ஒரு செல்போன் கிடந்தது. அந்த செல்போனில் இருந்த எண்களைக் கொண்டு விசாரித்தபோது, உயிரிழந்து கிடந்தவர் செல்வி எனத் தெரியவந்தது.
இந்தச் சடலம் கிடந்த இடத்துக்கு அருகிலுள்ள புல்லில் ரத்தக் கறைகள் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து வழக்குப் பதிவு செய்து செல்வியின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.