சென்னை: சென்னையில் கடந்த 7 நாட்களில் 280 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனை தடுக்க சென்னையில் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ Drive Against Banned Tobacco Products மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி சென்னை காவல் ஆணையர் உத்தரவின்படி, காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 146 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 280 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலைப் பாக்கெட்டுகள், 1.3 கிலோ எடை கொண்ட மாவா பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.