மதுரை: சவுதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்ற பரமக்குடி இளைஞர் மாயமானது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பரமக்குடியைச் சேர்ந்த கிரிஜா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் சரத்குமார் (30). சவுதி அரேபியாவில் பெட்ரோல் பங்க் வேலைக்காக கடந்த ஜூன் மாதம் ரியாத் சென்றார். அப்போது ஏர்வாடியைச் சேர்ந்த ஒருவர் சவுதியில் வசிக்கும் ஒருவரிடம் கொடுக்க கருவாடு பார்சல் ஒன்றை கொடுத்து விட்டார்.
விமான நிலையத்தில் கருவாடு பார்சலை சோதனையிட்டபோது, அதில் தடை செய்யப்பட்ட ஒரு பொருள் இருந்தது. அதன் பிறகு என் கணவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. எனவே என் கணவரை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா விசாரித்தனர். அரசு தரப்பில், ராமநாதபுரம் ஆட்சியர் உடனடியாக வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்தின் இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் கணவர் நிலை என்ன? அவரை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.