காரைக்குடி: காரைக்குடி பர்மா காலனி கற்பக விநாயகர் நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி மோகன் (61). இவர் தனது மகன் ஆனந்தகுமாருடன் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
மோகனின் மனைவி தூங்குவதற்காக அருகேயுள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மோகனின் மனைவி அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த மோகனும், அவரது மகன் ஆனந்தகுமாரும் அறையின் ஜன்னல் பக்கம் சென்றுபார்த்தனர். ஜன்னல் உடைக்கப்பட்டு, கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டு இருந்தது.
இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரூ.50,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.