க்ரைம்

பொன்னேரி | பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு: தனியார் பள்ளி மீது புகார்

செய்திப்பிரிவு

பொன்னேரி: திருவாரூர் மாவட்டம் - வேலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜா - கண்மணி தம்பதியர்.இவர்களது மகள் ஹரிணிகா(16), பொன்னேரி அருகே உள்ளதச்சூரில் உள்ள விடுதியுடன் கூடிய தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

கடந்த 25-ம் தேதி, ஹரிணிகாவுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பள்ளி நிர்வாகம் அவருக்கு மாத்திரை கொடுத்துள்ளனர்.

மறுநாள் 26-ம் தேதி அதிகாலை ஹரிணிகாவின் உடல்நிலை மோசமானதால், அவர் செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாணவியின் தாய் கண்மணி கவரப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், பள்ளி நிர்வாகம் சரியான நேரத்தில் மருத்துவம் பார்த்திருந்தால், தனது மகளை காப்பாற்றி இருக்கலாம். ஆகவே, பள்ளி நிர்வாகத்திடம் விசாரணைநடத்தக் கோரி உள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஹரிணிகாவின் உடல் நேற்று சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

SCROLL FOR NEXT