க்ரைம்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: சென்னையில் 7 நாட்களில் 43 வழக்குகள் பதிவு 

செய்திப்பிரிவு

சென்னை: தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக சென்னையில் கடந்த 7 நாட்களில் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விற்பனை தடுக்க சென்னையில் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ Drive Against Banned Tobacco Products) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி சென்னை காவல் ஆணையர் உத்தரவின்படி, காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 91ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 46 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 51.57 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 7.86 கிலோ எடை கொண்ட மாவா, 2 செல்போன்கள், 1 ஆட்டோ மற்றம் ரொக்கம் ரூ.9,120/- பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT