சென்னை: கந்து வட்டி வசூலில் ஈடுபட்டதாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கந்து வட்டியால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க தமிழ்நாடு காவல் துறை “ஆபரேஷன் கந்து வட்டி” என்ற அதிரடி நடவடிக்கையை கடந்த 8-ம் தேதிமுதல் எடுத்து வருகிறது.
இதில் கந்துவட்டித் தடைச் சட்டத்தின்கீழ் தமிழ்நாடு காவல் துறையினர் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
89 வழக்குகள்
அதன்படி, கடந்த ஒரு வாரத்தில், தமிழ்நாடு முழுவதும் 124 கந்து வட்டி, மீட்டர் வட்டி தொடர்பான புகார் மனுக்கள் காவல் நிலையங்களில் பெறப்பட்டது. அதில் 89 புகார் மனுக்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 32 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள புகார்களின் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
22 கந்து வட்டி குற்றவாளிகளின் வீடுகளிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள பூர்த்தி செய்யப்படாத காசோலைகள், புரோ நோட்டுகள், கையெழுத்திடப்படாத ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என டிஜிபி குறிப்பிட்டுள்ளார்.