மனைவி கண் முன்னே கணவனை அடித்துக் கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தனது பெயரில் உள்ள நிலத்தை விற்பனை செய்வதாகக் கூறி அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரிடம் முன்தொகை பெற்றுள்ளார். நிலம் விற்பனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து செல்வத்துக்கும், ராஜ்குமாருக்கும் இடையே அடிக்கடி வாய்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2015-ம்ஆண்டு செல்வம் தனது மனைவியுடன் நந்தம்பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கோதண்டன், சந்திரன் ஆகிய 3 பேர், மனைவியின் கண் முன்னே செல்வத்தை கடுமையாகத் தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதுதொடர்பாக குன்றத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு காஞ்சிபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தவழக்கை விசாரித்த நீதிபதிஎம்.இளங்கோவன் செல்வத்தை கொலை செய்தது நிரூபிக்கப்பட்டதால் ராஜ்குமார், கோதண்டன், சந்திரன் ஆகிய3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பை தொடர்ந்து குற்றவாளிகள் 3 பேரையும் குன்றத்தூர் போலீஸார் சிறைக்கு கொண்டு சென்றனர்.