க்ரைம்

கோவை | பெண் ஊழியர் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம்: சரணடைந்த தொழிலதிபரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு

செய்திப்பிரிவு

கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் நவநீதன் (50). தொழிலதிபர். கோவை மற்றும் ஈரோட்டில் டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது ஈரோடு நிறுவனத்தில் பவானி பகுதியை சேர்ந்த 37 வயது பெண் ஊழியராக பணியாற்றி வந்தார். திருமணமான இவர், குடும்பத் தகராறு காரணமாக, கணவரைப் பிரிந்து வசித்து வந்தார். கடந்த 29-ம் தேதி ஆர்.எஸ்.புரம் கன்னுசாமி வீதியில் உள்ள நவநீதன் வீட்டுக்கு வந்த அந்த பெண், தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அப்பெண்ணிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது, தொழிலதிபர் நவநீதன் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனால் முறை கர்ப்பமடைந்து, நவநீதன் மிரட்டியதால் கலைத்ததாகவும் அப்பெண் தெரிவித்தார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டதால், மருத்துவ சிகிச்சைக்காக பணம் கேட்கச் சென்றபோது, நவநீதனும், அவரது மனைவி அகிலாவும் சேர்ந்து தன் மீது தீ வைத்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்ததை அடுத்து, நவநீதன், அவரது மனைவி அகிலா ஆகியோர் மீது ஆர்.எஸ்.புரம் போலீஸார் கொலை வழக்கு பதிந்தனர். இருவரையும் போலீஸார் தேடிவந்த நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலை நீதிமன்றத்தில் நவநீதன் நேற்று முன்தினம் சரணடைந்தார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மேலும் தலைமறைவான அகிலாவை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT