ஈரோடு: கடம்பூரில் லாரியில் கடத்தி வரப்பட்ட 1050 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸார், 3 பேரைக் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கடம்பூர் பேருந்து நிலையம் அருகே, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை எஸ்ஐ சந்திரசேகரன் தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை சோதனை செய்தபோது, ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது.
லாரியில் வந்த பவானி காலிங்கராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணேசன் (45), சத்தியமங்கலம் ஏலூரைச் சேர்ந்த அருளானந்தம் (54), பவானியைச் சேர்ந்த மோகன் (33) ஆகியோரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். சத்தியமங்கலம் பகுதியில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக, ரேஷன் அரிசியை கடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் மூவரையும் கைது செய்த போலீஸார், லாரியில் இருந்த 1050 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனர்.