க்ரைம்

பள்ளி மாணவியை கத்தியால் குத்திய வழக்கில் தேடப்பட்ட இளைஞர் தற்கொலை

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பிளஸ் 1 தேர்வு எழுதிவிட்டு நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். திருச்சி சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகில் நடந்து சென்றபோது, அந்த மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்த பொத்தமேட்டுப்பட்டியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் கேசவன் (22) என்பவர், மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் காயமடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸார் வழக்குப் பதிந்து கேசவனைத் தேடி வந்தனர். இந்நிலையில், கீழபூசாரிப்பட்டி அருகில் உள்ள ரயில்பாதையில் அவர் சடலமாக கிடந்தார். தகவலறிந்த மணப்பாறை போலீஸார் மற்றும் திருச்சி ரயில்வே போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT