க்ரைம்

மாணவிக்கு பாலியல் தொல்லை: சேலம் தனியார் பள்ளி ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

செய்திப்பிரிவு

சேலம்: சேலத்தில் 3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதி மன்றம்தீர்ப்பளித்தது.

சேலம் மூன்று ரோடு அருகேயுள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் சதீஷ்குமார். இவர் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுதொடர்பாக மாணவி பெற்றோரிடம் புகார் செய்தார். இதையடுத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கடந்த2018-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி ஆசிரியர் சதீஷை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், ஆசிரியர் சதீஷ், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிந்தது. இதையடுத்து, சதீஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று சதீஷுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT