க்ரைம்

ரூ.1 கோடி ஐபிஎல் சூதாட்டம்: அஞ்சல் துறை அதிகாரி கைது

செய்திப்பிரிவு

போபால்: வாடிக்கையாளர்களின் ரூ.1 கோடி பணத்தை கையாடல் செய்து ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட அஞ்சல் துறை அதிகாரியை போலீஸார் கைது செய்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பஜாரியா நகரில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் துணை போஸ்ட் மாஸ்டராக பணியாற்றுபவர் விஷால் அஹிர்வார். இவர் பணியாற்றும் அலுவலகத்தில் சிறுசேமிப்பு கணக்கு வைத்திருக்கும் கிராம மக்கள், அங்கு வந்து பணத்தைச் செலுத்திவிட்டு செல்வர்.

ஆனால் பணத்தை விஷால் அஹிர்வார் அவர்களது கணக்கில் வைக்காமல் பல மாதங்களாக கையாடல் செய்து வந்துள்ளார். பலர் அஞ்சல் நிலையம் சென்று தங்களது பணத்தை எடுக்க முயன்ற போது பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது சிறுசேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களின் பணத்தை எடுத்து கிரிக்கெட் சூதாட்டத்தில் விஷால் ஈடுபட்டது தெரியவந்தது. சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பணத்தை அவர் கையாடல் செய்துள்ளார்.

இதையடுத்து அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து விஷால் அஹிர்வாரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT