க்ரைம்

4 நாட்கள், 63 கேப்சூல் மாத்திரைகள், ரூ.5.56 கோடி மதிப்பிலான போதைப்பொருள்: சென்னையில் உகாண்டா நபர் கைது

அ.ஸ்டாலின்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.5.56 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டது. வயிற்றுக்குள் கேப்சூலாக மறைத்து கடத்தி வந்த உகாண்டா நாட்டைச் சேர்ந்தவரை கைது செய்த சுங்க அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னைக்கு வெளிநாட்டில் இருந்து பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக விமானநிலைய சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி அதிகாலை சாா்ஜாவிலிருந்து அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் உகாண்டா நாட்டைச் சேர்ந்த லவுபன் (42) என்ற பயணியும் வந்தாா்.அவா் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சுற்றுலாப் பயணிகள் விசாவில் வந்திருந்த அவரிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார். இதையடுத்து அவருடைய உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனா். சோதனையில் எதுவும் கிடைக்காத நிலையில், அவரை சென்னை விமானநிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்று, எக்ஸ்ரே எடுத்து பாா்த்தபோது, அந்த பயணியின் வயிற்றுக்குள் கேப்சூல்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சுங்க அதிகாரிகள்,அந்த உகாண்டா பயணியை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அவருக்கு இனிமா கொடுத்து வயிற்றுக்குள் இருந்த கேப்சூல்களை வெளியே எடுத்தனா்.

இவ்வாறு 4 நாட்களாக மொத்தம் 63 கேப்சூல் மாத்திரைகளை வெளியே எடுத்தனா். அந்த கேப்சூல்களை உடைத்து பார்த்தபோது அதனுள் ஹெராயின் போதைப் பொருள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.63 கேப்சூல்களில் மொத்தம் 694.64 கிராம் ஹெராயின் போதைப்பொருள் இருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா்.இதன் சா்வதேச மதிப்பு ரூ.5.56 கோடி.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் உகாண்டா பயணியை கைது செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அந்த நபர், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது.

சென்னையில் யாரிடம் இந்த போதைப்பொருளை ஒப்படைக்க கடத்தி வந்தாா் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு,இதே போல போதைப்பொருள் அடங்கிய கேப்சூல்களை வயிற்றில் மறைந்து கடத்தி வந்த வெளிநாட்டு பயணி ஒருவரை சுங்கத்துறையினா் கைது செய்து ரூ.8 கோடி மதிப்புடைய ஹெராயினை கைப்பற்றினா் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT