க்ரைம்

திருப்பூர் | 2 குழந்தைகளுடன், தாய் கொலை: 4 தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூரில் மாநகர் சேடர்பாளையம் மெட்டுவாதோட்டம் பாலாஜி நகரில் உள்ள வாடகை வீட்டில் கடந்த 15 நாட்களாக வசித்து வந்தவர் முத்துமாரி (35). திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இவர்,தகராறு காரணமாக கணவரைபிரிந்து, தனது 2 மகன்களானதர்னிஷ்(9), நித்திஷ்(4) ஆகியோருடன் இங்கு வந்துள்ளார். பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். வேறொரு நண்பருடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை முத்துமாரியின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால், வீட்டு உரிமையாளர் வந்து பார்த்துஉள்ளார். அப்போது முத்துமாரி மற்றும் அவரது 2 மகன்கள் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைக் கண்டுஅதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக திருமுருகன்பூண்டி போலீஸாருக்கு தகவல் அளித்தார்.

3 பேரின் சடலங்களையும் போலீஸார் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டிலிருந்து ரத்தக்கறை படிந்த இரும்பு ராடு உள்ளிட்ட தடயங்களை போலீஸார் சேகரித்தனர்.

இதுதொடர்பாக திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘முத்துமாரியை மனைவி என்று சொல்லித்தான் அங்கிருந்த நபர் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த நபருடன் நேற்று முன்தினம் இரவு சண்டை ஏற்பட்டுள்ளதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். முத்துமாரியுடன் தங்கியிருந்தநபரை தேடி வருகிறோம். 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுஉள்ளன’’ என்றார்.

இறந்தவர்கள் குறித்த விவரம் எதும் தெரியவில்லை. வீட்டின் உரிமையாளர் தந்த தகவல்களைக் கொண்டே விசாரணை நடக்கிறது.

SCROLL FOR NEXT