கோவிந்தராஜ் 
க்ரைம்

ஸ்ரீபெரும்புதூர் | குடிபோதையில் 2 மகள்களை கொலை செய்த தந்தை கைது

செய்திப்பிரிவு

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சின்ன மதுரப்பாக்கம் பகுதியில் வசிப்பவர் கோவிந்தராஜ் (40). இவரது மனைவி கீதா. இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள்.

கோவிந்தராஜ் வேலையின்றி இருந்து வந்ததாகவும், அவர் மதுவுக்கு அடிமையானவர் என்றும்தெரிகிறது. இதனால் அவ்வப்போது கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கோவிந்தராஜ் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கீதா வீட்டில் இல்லை. வீட்டில் வழக்கம்போல் தகராறு செய்ததால் முதல் மகள் நந்தினி(16), 4-வது மகள் தீபா(10) ஆகியோர் கண்டித்துள்ளனர். இதனால் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.

குடிபோதையில் இருந்த கோவிந்தராஜ் அருகில் இருந்த கட்டையை எடுத்து சிறுமிகள் இருவரையும் தாக்கியுள்ளார். சிறுமிகள் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் கோவிந்தராஜ் தாக்குதலால் சிறுமிகள் இருவரும் மயங்கி விழுந்து இறந்துள்ளனர்.

மூத்த மகள் தற்கொலை

இதுகுறித்து ஒரகடம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் 2 சிறுமிகளின் சடலங்களையும் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவிந்தராஜிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாய் வேலைக்கு சென்றிருந்த நிலையில் தனது 2 மகள்களை தந்தையே குடிபோதையில் அடித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"கடந்த 2 மாதங்களுக்கு முன் இவரது கொடுமை தாங்காமல் முதல் மகள் நதியா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்போதே போலீஸார் கோவிந்தராஜ் மீது தீவிர நடவடிக்கை எடுத்திருந்தால் 2 குழந்தைகள் மரணத்தை தடுத்திருக்கலாம்" என்று அந்தப் பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT