நாமக்கல்: நாமக்கல்லில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.4.90 லட்சத்தை கொள்ளையடித்த வட மாநில கொள்ளையர்கள் இருவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
நாமக்கல் அருகே புதுச்சத்திரம் பெருமாள்கோயில் மேடு பகுதியில் இருந்த தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் கடந்த 4-ம் தேதி நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் காஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்து ரூ.4 லட்சத்து 90 ஆயிரத்து 500 கொள்ளையடித்துச் சென்றனர். மேலும், தடயங்களை அழிக்க இயந்திரம் முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொள்ளைச் சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில் 15 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல் - சேலம் சாலை ஏ.கே.சமுத்திரத்தில் தனிப்படை காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். காரில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் புரஜாபாத் (32), பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது இம்ரான் (28) என்பதும், சேலம் அஸ்தம்பட்டியில் வசித்து வருவதும் தெரிந்தது. தீவிர விசாரணையில், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடித்தவர்கள் என்பது தெரிந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து ரூ.1.58 லட்சம் ரொக்கம் மற்றும் காஸ் வெல்டிங் இயந்திரம், ஆக்சிஜன் சிலிண்டர், கார் உள்ளிட்ட வற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி கூறும்போது, சேலத்தில் சுரேஷ் புரஜாபாத் டீ கடை வைத்து நடத்தி வருகிறார். முகம்மது இம்ரான் ஃபேஷன் டிசைனிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சுரேஷ் டீ கடைக்கு முகம்மது இம்ரான் வந்து செல்லும்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. போதிய வருவாய் இல்லாததால் இருவரும் கூட்டு சேர்ந்து கொள்ளையடித்துள்ளனர், என்றார்.