பொன்னேரி: மீஞ்சூர் அருகே கொண்டைக்கரை ஊராட்சி தலைவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நேற்று 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள கொண்டைக்கரை ஊராட்சித் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த மனோகரன்(38) என்பவர் 2-வது முறையாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த 15-ம் தேதி இரவு மனோகரனை 10 பேர் கும்பல் கொலை செய்தது.
இதுகுறித்து, மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 2 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அந்த விசாரணையின் அடிப்படையில், மீஞ்சூர் அருகே உள்ள வெள்ளிவாயல் சாவடியை சேர்ந்த சுந்தர் என்கிற சுந்தரபாண்டியன்(43), அவரது ஓட்டுநர் பத்மநாபன், உறவினர் அரவிந்த் குமார் மற்றும் கூட்டாளிகள் ராஜ்குமார் என்கிற பாட்டில் ராஜ், யுவராஜ் என்கிற கிளி யுவராஜ், ராஜேஷ் என்கிற ஆகாஷ், பாலா என்கிற யுவராஜ், மது, கோபால கிருஷ்ணன், சூர்யா என 10 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், வல்லூர் அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளை அகற்றும் பணிக்கான ஒப்பந்தம் எடுத்த கொண்டைக்கரை ஊராட்சி தலைவர் மனோகரன், லாரி உரிமையாளரான சுந்தரபாண்டியனுக்கு லோடு வழங்காததால் ஏற்பட்ட விரோதம் காரணமாக மனோகரன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.