நாமக்கல்லில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க 15தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது, என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி தெரிவித்தார்.
நாமக்கல் அருகே பெருமாள்கோயில் மேட்டில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 4-ம் தேதி நள்ளிரவு நேரத்தில் ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்மநபர்கள் அலாரம், சிசிடிவி கேமரா இணைப்புகளை துண்டித்து, ஏடிஎம் இயந்திரத்தை காஸ் வெல்டிங் மூலம் உடைத்து உள்ளிருந்து ரூ. 4.89 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி கூறியதாவது:
நாமக்கல்லில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஏடிஎம்களில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் கடிதம்அனுப்பப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இருப்பது காவல் துறையினருக்கு உதவியாக இருக்கும். ஏடிஎம் மையங்கள் இரவு நேரத்தில் குறிப்பிட்ட நேரம் மூடுவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள வடமாநிலத்தவர்கள் குறித்த விவரங்கள் உள்ளன. அவர்கள் ஏதாவது குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.