க்ரைம்

குண்டூர் மாணவி கொலை வழக்கு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

என். மகேஷ்குமார்

குண்டூர்:ஆந்திராவின், குண்டூர் பரமைய்ய குண்டா பகுதியை சேர்ந்த பி.டெக் மாணவி ரம்யா (23). இவருக்கும் குண்டூரை சேர்ந்த சிவகிருஷ்ணா (25) என்பவருக்கும் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. சில மாதங் களிலேயே சிவகிருஷ்ணா, ரம்யாவை காதலிக்க தொடங்கினார். அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.

இதை ஏற்காத ரம்யா, நண்பனாகத்தான் நினைத்தேன், காதலிக்கவில்லை எனக் கூறி, அவரது நட்பை துண்டித்துவிட்டார். சிவ கிருஷ்ணாவின் செல்போன் எண்ணையும் ‘பிளாக்’ செய்து விட்டார்.

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று குண்டூரில் ரம்யா நடந்து சென்ற போது, அவரை பின்தொடர்ந்து சென்று, தன்னை காதலிக்குமாறு சிவகிருஷ்ணா வற்புறுத்தினார். அவர் மறுத்ததால், ஆத்திரமடைந்த சிவகிருஷ்ணா கத்தியால் ரம்யாவை குத்தி கொலை செய்தார்.

சிசிடிவி வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்த போலீஸார், சிவ கிருஷ்ணாவை கைது செய்தனர். கடந்த 8 மாதங்களாக குண்டூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்தவழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ரம்யாவை கொலை செய்தபோது நேரடியாக பார்த்த சாட்சிகளின் வாக்குமூலத்தை வைத்து,சிவ கிருஷ்ணாதான் கொலையை செய்தார் என்பதை நீதிமன்றம் உறுதி செய்கிறது. அவரை தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிடுகிறது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT