க்ரைம்

ராமநாதபுரம் | மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்:பெற்ற மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பூப்பாண்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் கோட்டை சவரிமுத்து (39). இவர் பனை ஏறும் தொழிலாளி ஆவார். இவரது மனைவி வெளியே வேலைக்கு சென்றுவிடும் நேரங்களில் தனது 13 வயது மகளுக்கு கோட்டை சவரிமுத்து கடந்த 2020 நவம்பர் முதல் 2021 ஏப்ரல் வரை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

இதையறிந்த சிறுமியின் தாய் கடந்த 18.4.2021-ல் கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கோட்டை சவரிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இவ்வழக்கில் நேற்று சவரிமுத்துக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஏ.சுபத்ரா உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கீதா ஆஜரானார்.

SCROLL FOR NEXT