நாகப்பட்டினம்: நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தில் மோகன்(37) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 400 கிலோ கஞ்சாவை சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீஸார் கடந்த பிப்.18-ம் தேதி பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சா ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்டு, நாகை வழியாக இலங்கைக்கு விசைப்படகில் கடத்த இருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக, மோகன் மற்றும் படகில் காவலுக்கு நின்றிருந்த பாப்பாக்கோவில் சரவணன்(37), கீச்சாம்குப்பம் ஜெகதீசன்(34), அக்கரைப்பேட்டை சிலம்பு செல்வன்(35), நிவாஸ்(30) ஆகிய 5 பேரை தனிப்படை போலீஸார் பிடித்து, நாகை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக, நாகை நகர இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப் பதிவு செய்து, 5 பேரையும் கைது செய்தார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஜெகதீசன், சிலம்புசெல்வன், நிவாஸ் ஆகியோருடன் இன்ஸ்பெக்டர் பெரியசாமி நாகையில் உள்ள ஒரு ஹோட்டலில் போலீஸ் உடையில் பிரியாணி சாப்பிடும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் பெரியசாமியை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தஞ்சை சரக டிஐஜி கயல்விழி நேற்று உத்தரவிட்டுள்ளார்.