க்ரைம்

சிவகங்கை | முந்திரி காட்டில் மனநலம் பாதித்த பெண் மர்ம மரணம்

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 28 வயதுள்ள மனநலம் பாதிக்கப்பட்ட பெண், நேற்று முன்தினம் பகலில் அருகேயுள்ள கோயிலில் நடந்த திருவிழாவுக்குச் சென்றுள்ளார். ஆனால் இரவு வரை வீட்டுக்கு வரவில்லை. உறவினர்கள் பல இடங்களிலும் அவரை தேடினர்.

இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியில் உள்ள முந்திரிக் காட்டில் ஆடை கலைந்த நிலையில் மர்மமான முறையில் அப்பெண் இறந்து கிடந்தார். அவர் இறந்து கிடந்த பகுதி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தது என்பதால், சாக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி அறந்தாங்கி சாலையில் அப்பெண்ணின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீஸார் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் சிவகங்கை எஸ்பி செந்தில்குமார் விசாரணை நடத்தினார். குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT