திருநெல்வேலி: சட்டவிரோத மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததாக உதகை கனிமவளத்துறை பெண் உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் கிராமத்தில், கேரள மாநிலம் பத்தினம்திட்டா சீரோ மலங்கரா டயோசீசனுக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடம் கோட்டயத்தைச் சேர்ந்த மனுவல் ஜார்ஜ் என்பவருக்கு 2019-ல் டயோசீசன் சார்பில், 5 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டிருந்தது.
அவர், அரசு அனுமதி பெற்று எம்.சாண்ட் குவாரி அமைத்தார். அந்த இடத்துக்கு அருகில் உள்ள ஓடையில் இருந்து ஆற்று மணலையும் அளவுக்கு அதிகமாக எடுத்து கடத்தியதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக விசாரித்த அப்போதைய சார் ஆட்சியர் பிரதீப் தயாள், சட்டத்துக்கு புறம்பாக 27,776 கியூபிக் மீட்டர் மணல் அள்ளியதாக ரூ.9.50 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார்.
மனுவல் ஜார்ஜ் உட்பட பலர் மீது கல்லிடைக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு 2021-ல் மாற்றப்பட்டது. திருநெல்வேலி சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி, பத்தனம்திட்டா சீரோ மலங்கரா கிறிஸ்தவ டயோசீசன் பிஷப் சாமுவேல் மார் ஏரேனியஸ் (69), பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல்(56), ஷாஜி தாமஸ் (58), ஜிஜோ ஜேம்ஸ்(37), ஜோஸ் சமகால (69), ஜோஸ் கலாயில்(53) ஆகிய 6 பேரை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர்.
போலீஸாரின் தொடர் விசாரணையில், அப்போது திருநெல்வேலியில் கனிமவளத்துறை உதவி இயக்குநராக பணியாற்றிய சபியா, மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தற்போது உதகையில் கனிமவளத்துறை உதவி இயக்குநராக பணியாற்றும் சபியாவை சிபிசிஐடி போலீஸார் நேற்று கைது செய்தனர்.