கார்த்திகா 
க்ரைம்

விஷம் கொடுத்து குழந்தையை கொன்ற தாய் கைது: மற்றொரு மகள் உயிருக்குப் போராட்டம்

செய்திப்பிரிவு

கூடா நட்புக்கு இடையூறாக இருப்பதாக ஒன்றரை வயது குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற தாய் கைது செய்யப்பட்டார். விஷம் கொடுக்கப்பட்ட மற்றொரு மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மார்த்தாண்டம் அருகே குளக்கஞ்சி கோவில்விளையைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி ஜெகதீஷ் (36). இவரது மனைவி கார்த்திகா (22). இவர்களுக்கு சஞ்சனா (4) என்ற மகளும், ஒன்றரை வயதில் சரண் என்ற மகனும் இருந்தனர். நேற்று முன்தினம் ஜெகதீஷ் வேலைக்கு சென்றுவிட்டார். குழந்தைகளுடன் வீட்டில் இருந்த கார்த்திகா, குழந்தை சரணுக்கு உடல்நிலை சரியில்லை என கணவருக்கு போன் செய்துள்ளார்.

வீட்டுக்கு வந்த ஜெகதீஷ், அங்கு மயங்கிக் கிடந்த குழந்தையை, மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். குழந்தை சரண் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். அதேநேரம், வீட்டில் இருந்த மற்றொரு குழந்தை சஞ்சனாவும் மயங்கிய நிலையில் கிடந்தார். இதுபற்றி அறிந்த உறவினர்கள் ஜெகதீஷ் வீட்டு முன்பு திரண்டனர். அவர்கள் மார்த்தாண்டம் போலீஸாருக்கு தகவல் தந்தனர்.

மார்த்தாண்டம் போலீஸார் ஜெகதீஷ் வீட்டில் கிடந்த விஷப்பொடி பாக்கெட்டை கைப்பற்றினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தை சஞ்சனாவை சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். குழந்தை சரணின் உடலை பிரேத பரிசோதனை செய்த ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை, மரணத்துக்கு விஷம் கொடுத்ததே காரணம் என அறிக்கையில் தெரிவித்தது.

ஜெகதீஷ் மற்றும் கார்த்திகாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, கார்த்திகா தனது 2 குழந்தைகளுக்கும் எலி மருந்து கொடுத்ததை ஒப்புக்கொண்டார். கொலை வழக்கில் கார்த்திகாவை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில், ‘‘இளைஞர் ஒருவரை காதலித்தேன். எனக்கு திருமணமாகிவிட்டதை அறிந்ததும், அவர் பேசுவதை நிறுத்திவிட்டார். இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, திருமணமாகி குழந்தைகள் இருப்பதால் தன்னுடன் பழகுவதை தவிர்க்குமாறு கூறினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கணவர் வேலைக்கு சென்ற நிலையில், சேமியா உப்புமாவுடன் எலிமருந்தை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தேன்” என கார்த்திகா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT