உடுமலை அரசு கலைக் கல்லூரியில் குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இன்றி அவதிக்குள்ளாகி வருவதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, ‘‘பழமை வாய்ந்த இக்கல்லூரியை நம்பி ஆயிரக்கணக்கான மாணவர்கள் உள்ளனர். கல்லூரி வளாகத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பழுதாகி பல ஆண்டுகளாக காட்சிப்பொருளாக உள்ளன.
இதனால் குடிநீர் இன்றி மாணவ,மாணவிகள் அவதியடைந்துவருகின்றனர்.
உடைந்துபோன மேஜை, நாற்காலிகள் மற்றும் தேவை யற்ற பொருட்களை பாதுகாக்கும் இடமாக தரை தளத்தில் உள்ள திறந்தவெளி கூட்டரங்கம்மாற்றப்பட்டுள்ளது. கழிவறைகள்முறையாக சுத்தம் செய்யப்படாததால் சுகாதாரமற்ற நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் ஆய்வு செய்து, மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்துதர வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து மாணவர் அமைப்பாளர்கள் கூறும்போது, ‘‘அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து மாணவர்கள் மூலம், எங்கள் அமைப்புக்கு புகார் கிடைத்துள்ளது. இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, தக்கநடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.