புதுச்சேரி: திருபுவனை அருகே உள்ள சிலுக்காரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை மகள் சகி(16). தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு வகுப்பு படித்து வந்தார். இவர், வீட்டில் அடிக்கடி செல்போனை பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி சகி கடந்த 3-ம் தேதி எலி பேஸ்ட் எடுத்து சாப்பிட்டுவிட்டு, யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
கடந்த 5-ம் தேதி அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது உறவினர்களிடம் தான் எலி பேஸ்ட் சாப்பிட்டதை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே அவரை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.