கமுதி அருகே அரசு தொடக்கப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை போலீஸார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர்ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கொட்டகுடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அபிராமம் அருகே பள்ளபச்சேரியை சேர்ந்த ஆதி முத்தமிழ்ச்செல்வன் (43) இரண்டாம் நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் சிறுமிகள் பலரை தனியாக அழைத்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் குழந்தைகள் நல அலுவலர்கள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் தாயார் அபிராமம் போலீஸில் புகார் அளித்தார். விசாரணையில் ஆசிரியர் ஆதி முத்தமிழ்ச்செல்வன் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து ஆதி முத்தமிழ்ச்செல்வன் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீஸார் அவரை கைது செய்தனர்.