க்ரைம்

திருவாரூர்: சொத்து தகராறில் தாயை கொலை செய்த மகன் கைது

செய்திப்பிரிவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராஜகோபாலபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(64). இவரது மனைவி பாப்பா(58). இவர்களின் மகன்கள் ராஜ்கண்ணன்(43), இளையராஜா(40), இளவரசு(37). இவர்கள் 3 பேருக்கும் திருமணமாகிவிட்டது. இளைய மகன் இளவரசுவின் வீட்டில் பாலகிருஷ்ணனும், பாப்பாவும் வசித்து வந்தனர்.

இந்நிலையில், பெற்றோரிடம் சொத்தில் பங்கு கேட்டு ராஜ்கண்ணன், இளையராஜா ஆகியோர் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். இதையடுத்து, சொத்து கேட்டு தங்களை மிரட்டுவதாக கடந்த 22-ம் தேதி பாப்பா அளித்த புகாரின்பேரில், தலையாமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜ்கண்ணனை கைது செய்தனர்.

இளையராஜாவை தேடி வந்தனர். இந்நிலையில், இளவரசுவின் வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்த இளையராஜா, அங்கிருந்த பெற்றோரிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டு, அவர்களை அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பியோடிவிட்டார். பலத்த காயமடைந்த இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாப்பா அன்று இரவு உயிரிழந்தார். பாலகிருஷ்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் நேற்று இளையராஜாவை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT