திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள மைக்கேல்பட்டி நகரைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் ஆனந்த்(30). இவர், கடந்த சில நாட்களாக 17 வயதுடைய செவிலிய மாணவி ஒருவரின் பின்னால் தொடர்ந்து சென்று, அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதை அந்த மாணவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் நேற்று முன்தினம் அந்த மாணவி வீட்டிலிருந்து பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது ஆனந்த் வழிமறித்து தகாத வார்த்தைகள் பேசி, மிரட்டி தரக்குறைவாக நடந்துள்ளார். இதனால பயந்துபோன அந்த மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மாணவி அளித்த புகாரின்பேரில் லால்குடி அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து ஆனந்த்தைக் கைது செய்தனர்.