கடலூர் மாவட்டம் கோதண்டராமபுரத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் (31). கூலித்தொழிலாளியான இவர் தனியாக வசித்து வந்துள்ளார். கிடைக்கும் வேலைக்குச் செல்வதோடு அங்குள்ளவர்களிடம் உணவு வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். கடந்த 21-8-2020 அன்று அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் அவர் உணவு கேட்டுள்ளார். அச்சிறுமி அவருக்கு உணவு அளித்த போது அவரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கடலூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் நீதிபதி எழிலரசி நேற்று நந்தகுமாருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமூகநலத்துறை மூலமாக ரூ.2 லட்சம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.