கூடலூர்: கூடலூர் அருகே, உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக வேட்பாளரை கிண்டல் செய்ததாக திமுகதொண்டர் கொலை செய்யப்பட்டார். மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம். கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி 10-வது வார்டில் அதிமுக சார்பில் கணியம்வயல் பகுதியைச் சேர்ந்த நெளஷாத் என்பவரின் மனைவி ஷிம்ஜித் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தனது வீட்டின்முன்பு ஷிம்ஜித் நின்று கொண்டிருந்தபோது, தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த திமுக தொண்டர் சமீர்(46) கிண்டல்செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தனது கணவர் நெளஷாத்திடம், ஷிம்ஜித் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த நெளஷாத், சமீரிடம்சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுஉள்ளார். அப்போது, தான் வைத்திருந்த கத்தியால் சமீரை குத்தியுள்ளார்.தடுக்க வந்த அஸ்கர்(38) என்பவரையும் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், சம்பவ இடத்திலேயே சமீர் உயிரிழந்தார். அங்கிருந்து நெளஷாத் தப்பி ஓடிவிட்டார்.
தகவலறிந்த தேவர்சோலை போலீஸார் அஸ்கரை மீட்டு கேரள மாநிலம் சுல்தான் பத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சமீரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக, கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தேவர்சோலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து நெளஷாத்தை கைது செய்தனர்.